Tuesday 16 September 2014

இயற்கையே நீ



இயற்கையே நீ...

ஆகாய விண்மீன்கள்...
அலைமோதும் கார்மேகம்!
இதமாய் வீசும் இளங்காற்று...
புன்னகைக்கும் பூக்கூட்டம்!
இசையோடு மழைச்சாரல்...
மனம் மயக்கும் மண்வாசம்!
விரல்கள் பதிந்த மணல்மேடு...
பாதம் தீண்டிச்செல்லும் கடலலைகள்!
பனித்துளி படர்ந்த புல்வெளி...
சூடேற்றும் சூரியனின் பொற் கதிர்கள்!
பட்டு வண்ண பட்டாம்பூச்சி...
சிட்டாய் பறக்கும் சிட்டுக்குருவி!
இன்னும் தொடரும்...
இயற்கையின் பயணம்!
செயற்கை செயலிழந்து விடும்...
இயற்கை இறந்து போகுமா?
அறுவியலில் ஆயிரம் முன்னேற்றம்...ஆயினும்
ஆதரவாய் ஆறுதல் தரும்,
இயற்கையே நீ...இன்றும்
இதயத்தில் இனிக்கிறாய்!

ரோஜா மீரான்.

Friday 15 August 2014

என் இந்திய தேசமிது...


என் இந்திய தேசமிது...

பல யுத்தங்களில்,
பலர் இரத்தத்தினை சிந்திய தேசமிது!
உரிமையை நிலை நாட்ட,
உயிர்களை உரமாக்கி...
ஒற்றுமையோடு ஒருங்கிணைந்த,
உன்னத தேசமிது!

சுயமரியாதையோடு சுவாசிக்க,
சுதந்திரத்தை போராடிப் பெற்ற...
பெருமைமிகு தேசமிது!
என் இந்திய தேசமிது...

சுதந்திரத்தை முழுமையாக சுவாசிக்கிறோமா...நண்பா?
சுயமாய் சிந்திக்கிறோமா?
சுயேட்ச்சையாய் செயல் படுகிறோமா?
எந்த நாட்டினிடமும், கையேந்தி நிற்காமல் ...
எந்த நாட்டுடனும் வணிக ஒத்துழைப்பை எதிர்பார்க்காமல் ...
எந்த நாட்டிற்கும் நம் திறமையை விற்காமல் ...
நம் நாட்டின் வளர்ச்சிக்காக,நாம் அனைவரும் பாடுபடுகிறோமா?
நாடு நமக்கென்ன செய்தது என்றெண்ணாமல்...
நாம் நாட்டுக்கு என்ன செய்தோம், என்று நினைக்கிறோமா?

அரசியல் அணுகுமுறையில் சுதந்திரம்...
பொருளாதார வளர்ச்சியில் சுதந்திரம்...
விவசாய முன்னேற்றத்தில் சுதந்திரம்...
சமச்சீர்க்கல்வியில் சுதந்திரம்...
அறிவியல் ஆராய்ச்சியில் சுதந்திரம்...
தொழில்நுட்ப மேன்மையில் சுதந்திரம்...
நோய்தீர்க்க சுகாதாரத்தில் சுதந்திரம்...
விளையாட்டுகளில் ஆர்வமூட்டும் சுதந்திரம்..
கலைஞர்களை ஊக்குவிக்கும் சுதந்திரம்...
லஞ்ச,ஊழல் ஒழிப்பில் சுதந்திரம்...
காவல்,இராணுவத்தை கௌரவிக்கும் சுதந்திரம்...
கலாச்சார தனித்துவ சுதந்திரம்...
ஒவ்வொரு துறையிலும் முறைக்கேடற்ற...
முறையான முயற்சியின் சுதந்திரம்...
அனைத்தையும் பெற்று விட்டோமா?

ஒவ்வொரு தனி மனிதனுக்கும்...
உண்ண உணவு,உடுத்த உடை,தங்க இருப்பிடம்,
வேலையற்றோர்க்கு வேலை வாய்ப்பு,
தொழில் முனைவோர்க்கு தொழில் வசதி வாய்ப்பு,
தருவிக்கும் நிலையை அடைந்து விட்டோமா?

கொலை,கொள்ளை,கற்பழிப்பில்லாத..
அநியாயம்,அக்கிரமம்,அநீதியில்லாத...
ஏற்ற தாழ்வு பாகுபாடில்லாத...
சாதி மத, சச்சரவில்லாத...
சுயநலமில்லாச் சமுதாயத்தை செதுக்கிவிட்டோமா?

ஒவ்வொரு சுதந்திரத்தினத்தன்றும்...
சுதந்திரக் கொடியேற்றி,
இனிப்பைச் சுவைத்துவிட்டு...
விடுமுறையை மட்டும்,
கொண்டாடி மகிழ்கிறோமா?
சிந்திப்போமா?

என் இந்திய தேசமிது...
என் மூச்சிற்க்கும் பேச்சிற்க்கும் வித்திட்ட பூமியிது ...
என் தேசத்தை நான் நேசிக்கும் நேரமிது!

ஜெய் ஹிந்!




ரோஜா மீரான்.Roja Meeran)

Saturday 9 August 2014

வாடகைத்தாய்



வாடகைத்தாய்

என்னுள்
பல காயங்கள்...
ரணமாய் 
வலித்த போதும்...
கை நீட்டி,
காசை வாங்கிக்கொண்டேன்!
உனை பெற்றெடுக்க ...
பத்து மாதம் சுமந்தபோது,
தாய்மையில் தழைத்துநின்றேன்...
ஈன்றெடுத்து நிமிர்ந்தபோது,
ஈருயிரை ஓருயிராய் கண்டேன்!
மார்பை கவ்வி, பால் குடித்தாய், நீ!
மனம் குளிர்ந்து,மகிழ்ந்துவிட்டேன்,நான்!-உன்னை
அள்ளி எடுத்து அணைத்துகொண்டேன்,
ஆசை தீர முத்தமிட்டேன்...
காசு தந்தவள்,
கையிலெடுத்துகொண்டாள்!
ஈரம் காயாத பால் துளிகள்,உன் இதழில்.
ஈரம் பெருகி,தெறித்து சிதறும்,கண்ணிர் துளிகள்...
என் விழியில்...
ஈன்றெடுத்து, ஈடு செய்ய
ஈட்டும் பொருள் ஏதடா?
காசு கிடக்கிறது...
என் காலடியில்!
ரோஜா மீரான்.